சென்னை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் துடைப்பத்தால் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பு ஒன்றில் செய்முறை நோட்டை எடுத்து வந்து காட்டுமாறு கேட்ட ஆசிரியரை மாணவன் ஒருவன் தாக்க முயற்சித்து தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோவும் வெளியானது. இந்த வீடியோக்கள் வெளியாகி அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களை இடைநீக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்க, மாணவர்கள் சிலர் பின் இருக்கையில் அமர்ந்தபடி செல்போனில் பாட்டுப் போட்டு குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விசாரணையில், இந்த வீடியோ எடுக்கப்பட்டது திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. அந்த பள்ளி மாணவர்கள் குத்தாட்டம் போடும் வகுப்பு 12ம் வகுப்பு ஏ2 பிரிவு என்பதும், வகுப்பில் பாடம் நடத்தியது ஆங்கில ஆசிரியை கீதா என்பதும் தெரிய வந்துள்ளது. குத்தாட்டம் போடும் மாணவர்களில் ஒருவர் திருப்போரூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர், மற்றொருவர் தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் என முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது, தலைமை ஆசிரியர் கடந்த சில நாட்களாக விடுமுறையில் உள்ளதால் காவல் துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் புகார் அளித்த பிறகே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து திருப்போரூர் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, ‘‘திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் இதுபோன்று அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அதை தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் மற்றும் அவதூறு பேசுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே, மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற செயல்களை தடுத்து தமிழக அரசுப்பள்ளிகள் மீதான பார்வையை மாற்ற முடியும்’’ என்றனர்.