×

சங்கம்விடுதியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் அமர்க்களம்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதியில் நொண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி இன்று கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  திருச்சி, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.

275 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  காளைகள், வீரர்களுக்கு தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான மருத்துவக்குழுவினர்  பரிசோதனை செய்தனர்.  ஜல்லிக்கட்டு காலை 8.30 மணிக்கு துவங்கியது. ஆர்டிஓ கருணாகரன் துவக்கி வைத்து உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் மற்ற காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு  சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. தாசில்தார் புவியரசன், டிஎஸ்பி லில்லிகிரேஸ், கந்தர்வகோட்டை  இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன்  மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி  150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




Tags : Jallikkatu , Jallikattu at Sangam Hotel: 700 bulls amarkkalam
× RELATED வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு...