ஈரோடு: ஈரோட்டில் உலக சிவனடியார்கள் அமைப்பு சார்பில், சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐ.ஐி., பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் எச்.ஏ1 பெட்டியில் பயணம் செய்து வந்தார். அப்போது, அவரது பாதுகாப்புக்காக கை துப்பாக்கி கொண்டு வந்துள்ளார். ஈரோடு ரயில் நிலையம் வந்த போது, கை துப்பாக்கியை இருக்கையில் மறந்து வைத்துவிட்டு அவர் இறங்கி தங்கும் விடுதி அறைக்கு சென்று விட்டார்.
அங்கு துப்பாக்கியை ரயிலில் மறந்து விட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து பொன் மாணிக்கவேல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நல்லவேளை அவர் வந்த ரயில் நின்று கொண்டிருந்ததால், போலீசார் இருக்கையில் இருந்த துப்பாக்கியை மீட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஐி., பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதி ரயில்வே பாதுகாப்பு போலீசாரிடம் கொடுத்து துப்பாக்கியை பெற்று கொண்டார்.