திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகளின் சார்பில் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நேற்று திருவண்ணாமலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது,திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி அபயமண்டபம் அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் பா.முருகேஷ் ெகாடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் அண்ணா நுழைவு வாயில் அருகே முடிவடைந்தது.
அதில், எஸ்பி பவன்குமார், டிஆர்ஓ பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, அண்ணா நுழைவு வாயில் அருகே நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கள்ளச்சாராயம் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பது சட்ட விரோதமான செயல்.
எனவே, இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் குறித்து போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.