அனைத்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறி இருப்பதாவது:
ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீடு, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என தெரிய வருகிறது. எனவே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். அனைத்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழுமையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பினை, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.