சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் நெருங்கி விடும் வகையில் புதிய துப்பு கிடைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மூத்த நிர்வாகியும், தமிழக அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் வருடம் மார்ச் 29 ல் திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார்.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுசம்பந்தமாக டிஜிபிக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரியில் நீதிபதி வி. பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு உத்தரவிட்டார். அதற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்று தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ காவல்துறைகள் விசாரணை நடத்தியும், கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என்பதால், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன் மற்றும் சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும். அடுத்தக்கட்ட விசாராணையை சிறப்பு குழு புலனாய்வு தொடர வேண்டும். சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர் விசாரணையை கண்காணிக்க வேண்டும். அதை உயர் நீதிமன்றமும் கண்காணிக்கும்.
15 நாட்களுக்கு ஒரு முறை சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கு விசாரணை முடியும் வரை சிபிஐ அதிகாரி ரவிக்கு வேறு பணிகளை சிபிஐ ஒதுக்கக்கூடாது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு தேவையானவற்றை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்து சீலிடப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது. சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த 6 போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளோம்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம். கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளோம். அவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றார். இதையடுத்து, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ம் தேதி தள்ளிவைத்தார்.