பழநி: தென்னிந்தியாவில் திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வரும் கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலாகும். திருப்பதி என்றால் பக்தர்களுக்கு நினைவிற்கு வருவது லட்டு. இதேபோல் பழநி என்றாலே பக்தர்களின் நினைவிற்கு வருவது பஞ்சாமிர்தம். மலைவாழைப்பழம், கரும்புச் சர்க்கரை, தேன், நெய், பேரீட்சை, கற்கண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தம் கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2019 ஆகஸ்ட் 14ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக கோயில்களில் பிரசித்தி பெற்ற பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, பழநி கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவசமாக தொன்னையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக தொன்னை தயாரிக்கும் இயந்திரம் கோயில் நிர்வாகத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார். பழநி கோயில் அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.