தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கோபால் (39)(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில், முதல் மனைவிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், 16வயது மூத்த மகள் தர்மபுரியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அத்தை வீட்டில் தங்கி 11ம் வகுப்பு படித்து வருகிறாள். அவரது அத்தையான கோகிலா வீட்டில் அவரது மகள் கவிதா, மருமகன் ஓம்சக்தி ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி ஓம்சக்தி, 16 வயது மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டின் மாடிக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர், மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு, கவிதாவும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், மாணவியிடம் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, மாணவி அவரது தந்தையிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று மாணவியின் தந்தை தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவிதா, ஓம்சக்தி(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.