அலங்காநல்லூர் : அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்று விளங்கி வருகிறது. உலக தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவூட்டும் வீர விளையாட்டாக கொண்டாடி வருவது ஜல்லிக்கட்டு விழாவாகும். பல நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் இருந்து வந்த ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடல் பகுதியில் பிரம்மாண்ட மைதானம் அமைப்பதற்கு அறிவிப்பாணை வெளியிட்டார். இதற்கு இப்பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் அலங்காநல்லூர் மண்ணிற்கு பெருமை சேர்த்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த பகுதியிலேயே பாரம்பரியம் மாறாமல் பழமையை நிலைநாட்டும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்திட வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.