நாமகிரிப்பேட்டை : ராசிபுரம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் அவல நிலை காணப்படுகிறது.ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காலை- மாலை வேளையில் பேருந்து வசதியின்றி கிடைக்கும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர முழுக்க முழுக்க அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பஸ் கிடைப்பதில் குதிரை கொம்பாக உள்ளது. இதனால், கிடைக்கும் வாகனங்களில் ஏறி பள்ளி சென்று திரும்புவதற்குள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக் கொண்டு பயணம் செய்து வீடு வந்து சேர்கின்றனர். எனவே, பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.