சின்னமனூர் : தினகரன் செய்தி எதிரொலியாக, சின்னமனூர் 25வது வார்டில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, புதிய குழாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சின்னமனூர் நகராட்சி 25வது வார்டில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், பள்ளிவாசல், கோயில்கள், கிராம நிர்வாக அலுவலகம், வங்கிகள், ஏ.டி.எம் மையம் ஆகியவை உள்ளன. இப்பகுதி முஸ்லீம் தெற்கு தெருவில், நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகத்திற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில், பாதாளச் சாக்கடையும், கழிவுநீர் வாறுகாலும் செல்கின்றன. குடிநீர் குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டது.
இதனால், பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. குடிநீர் துர்நாற்றம் வீசியது. இதனால், கேன் தண்ணீரை வாங்கி குடித்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, தெற்கு முஸ்லீம் தெருவில், பாதாளச் சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை கண்டறிந்து புதிய குழாய் பதிக்க, நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் உத்தரவிட்டார். இதன்படி, நகராட்சி ஊழியர்கள் புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.