ஈரோடு : ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு பண்ருட்டி மற்றும் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்து பலாப்பழங்கள் வரத்து இருந்து வருகின்றது. இதில் பண்ருட்டி பலாப்பழங்கள் நல்ல ருசியாக உள்ளதால் அவற்றை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை இனி மெல்ல குறையும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தினசரி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு தினமும் சராசரியாக 5 டன் பலாப்பழங்கள் வரத்து இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக வரத்து மெல்ல அதிகரித்து தற்போது 10 டன்னுக்கு மேல் வரத்து உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதால் கிலோ ரூ.20க்கு கீழ் குறைய வாய்ப்பு உள்ளது. 3 மாதங்களுக்கு பலாப்பழம் சீசன் இருக்கும். இவ்வாறு கூறினர்.