கடலூர் : பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து, திருமணத்துக்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.கடலூர் புதுப்பாளையம், லோகாம்பாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார்(32). இவர், தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண் வேலை செய்து வந்த கம்ப்யூட்டர் சென்டரை, பிரவீன்குமார் லீசுக்கு எடுப்பதற்காக, அந்தப் பெண், திருமணத்திற்காக, அவரது பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 50 பவுன் நகைகளை சிறுக சிறுக பிரவீன்குமாரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த 17.1.2018ல் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். இதனால் அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த பிரவீன்குமார், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, பிரவீன்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரவீன்குமார் தனக்கு வேலை கிடைத்ததும் திருமணம் செய்வதாக கூறி தட்டிக்கழித்துள்ளார். இந்நிலையில் பிரவீன்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்த அந்த இளம்பெண், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, தனது தந்தையுடன் பிரவீன்குமார் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, பிரவீன்குமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன், தாய் நிர்மலா, சகோதரர் பிரசன்னகுமார் ஆகியோர் சேர்ந்து, அந்த பெண்ணையும், அவரது தந்தையையும் ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளனர். மீண்டும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வீட்டிற்கு வந்தால் கொலை செய்துவிடுவோம் என, மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன்குமார் உட்பட 4 பேரை கைது செய்து, கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், பிரவீன்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பிரவீன்குமாரின் தந்தை பாலகிருஷ்ணன், தாய் நிர்மலா, சகோதரர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.