×

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு... மதுரையில் சோகம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரை : மதுரையில்  மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்த போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பழங்காநத்தம் நேரு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. 30 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து கொண்டு இருந்த போது சிவக்குமார் என்ற தொழிலாளர் தவறி விழுந்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற லட்சுமணன், சரவணன் ஆகிய தொழிலாளர்கள் கீழே இறங்கிய போது, திடீரென விஷவாயு தாக்கியுள்ளது.

இதில் 3 தொழிலாளர்களும் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் உடல்களையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே   தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன், உரிமையாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிவகுமாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அவரை 2 சக்கர வாகனத்தில் கொண்டு செல்ல நேரிட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியதால் பின்னர் அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Tags : Maduray , Madurai, poison gas, workers
× RELATED மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து...