வேலூர்: சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட அவசர உதவி அழைப்புக்கான எஸ்ஓஎஸ் அமைப்புகள் பல இடங்களில் மாயமாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், சரக்கு போக்குவரத்தை எளிதாக்கவும் முக்கிய நகரங்களை அணைக்கும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாகவும், ஆறு வழிச்சாலைகளாகவும், எட்டு வழிச்சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே அவசர உதவி மையங்கள் அவசர உதவி அழைப்புக்கான கட்டுப்பாட்டு அறை அவசர கால முதலுதவி சிகிச்சை மையங்கள் டிரைவர்கள் ஓய்விடங்கள் என போன்ற வசதிகள் அமைந்துள்ளன.
அதேபோல் அமைக்கப்பட்ட அவசர உதவி அழைப்புக்கான எஸ்ஓஎஸ் அமைப்புகள் தொடர்ந்து பராமரிக்காமல் விடப்பட்டதால் துருப்பிடித்தும் பழுதடைந்தும் பல இடங்களில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டும் வீணாயின. இந்த நிலையில் சென்னை தொடங்கி பெங்களூரு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட எஸ்ஓஎஸ் அமைப்புகளில் பெரும்பாலான இடங்களில் எஸ்ஓஎஸ் அமைப்புகள் கழற்றி எடுத்து செல்லப்பட்டுள்ளன. மேலும் அவற்றை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு பைப்புகளும் மாயமாகியுள்ளன. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது பெரும்பாலான இடங்களில் எஸ்ஓஎஸ் அமைப்பு பழுதடைந்துள்ளது. இதனால் அவற்றை சரி செய்வதற்காக எடுத்து சென்றுள்ளனர் விரைவில் மீண்டும் அந்த அமைப்புகள் அங்கு நிறுவப்படும் என்றனர்.