பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி டேன்டீ மற்றும் சேரங்கோடு பகுதியில் 13 காட்டு யானைகள் குட்டியுடன் டேன்டீ தேயிலைத்தோட்டம் அருகே முகாமிட்டிருந்ததால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்கு சேரம்பாடி வனச்சரகம் வனக்காப்பாளர் கிருபானந்தகுமார் மற்றும் யானை கண்காணிப்பு பணியாளர்கள் நேற்று முன்தினம் சேரங்கோடு மற்றும் சேரம்பாடி டேன்டீ தேயிலை தோட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், யானைகளை கிளன்ராக் வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, பந்தலூர் சேரம்பாடி நெடுஞ்சாலை பகுதியை யானைகள் எந்த நேரத்திலும் கடந்து செல்லலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.