×

பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பேட்டி

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நேற்று இரவு நடந்த 32வது லீக் போட்டியில் கொரோனா பாதிப்பையும் மீறி டெல்லி அணி, பஞ்சாப் அணியை அடித்து நொறுக்கி அபார வெற்றிபெற்றது. பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். டெல்லி அணியில் சர்பிராஸ்கான் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்த பஞ்சாப் அணி கேப்டன் மயங்க்அகர்வால் அணிக்கு திரும்பினார். தொடக்கம் முதலே டெல்லி அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நெருக்கடி ஏற்பட ஷிகர்தவான் 9 ரன்களில் லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அதிரடியாக விளையாட முயன்ற கேப்டன் அகர்வாலும் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பேர்ஸ்டோ 9 ரன்களில் கலில் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்தில் வீழ்ந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து தடுமாறியது. அணியை காப்பாற்ற ஜித்தேஷ் சர்மா தனி ஆளாக போராடி 32 ரன்கள் எடுக்க, தமிழக வீரர் ஷாரூக்கானும் சோபிக்காமல் 12 ரன்களில் அவுட்டானார். மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பஞ்சாப் அணியினருக்கு கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை.

சிக்சர், பவுண்டரி என இருவரும் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இதனால் 3 ஓவரிலேயே டெல்லி 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் அரைசதத்தை அடித்தார். தொடர்ந்து சரவெடியை கொளுத்திப் போட்ட இந்த ஜோடி பவர்பிளே முடிவில் 81 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் ஷர்பராஸ்கான் இணைந்தார். வார்னர் கடைசி வரை களத்தில் நின்று 30 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். ஷர்பராஸ்கான் 12 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதனால் டெல்லி அணி 10.3 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

போட்டிக்கு பின் டெல்லி கேப்டன் ரிஷப்பன்ட் கூறுகையில், ``எங்கள் அணியில் கொரோனா தொற்றால் திடீரென பலர் பாதிக்கப்பட்டதால், ஒருவித குழப்பமும் பதற்றமும் இருந்தது. இருப்பினும் அனைவரும் மற்றதைப் பற்றி கவலைப்படாமல் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினோம். எங்களது பந்துவீச்சாளர்கள் அற்புதமாக வீசி பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. அனைவருமே பட்டையை கிளப்பினர். துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா அணியை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அறிவுரை தேவை கிடையாது. எனவே இருவருக்குமே தேவையில்லாத அறிவுரைகளை தான் ஒருபோதும் முயற்சிப்பதில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags : Rishabh Punt , The bowlers performed wonderfully: Interview with Captain Rishabh Punt
× RELATED பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பாராட்டு