மதுரை: கோநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டியளித்தார். உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார். கொடநாடு பங்களா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இடம். எதிர்கட்சி என்பதற்காக எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியை குறைசொல்ல வேண்டியதில்லை. அதிமுகவை ஜனநாயக முறைப்படி மீட்டு எடுப்போம். அதிமுக சின்னத்துடன் பேனர் வைத்த காரணத்தால் தான் முசிறி செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அது, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சசிகலா அதிமுகவை மீட்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவார்.
அதிமுகவை மீட்டெடுத்து, சசிகலாவை அதன் பொதுச்செயலாளராக அமர்த்துவோம். தமிழக மக்களின் ஆதரவோடு அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகளை செய்கிறோம். சுவாசம் உள்ளவரை நானும் எனது தொண்டர்களும் அதிமுகவை மீட்டெடுக்க போராடுவோம். அதிமுகவை கைப்பற்றுவது என்பது யானைப்படை, குதிரைப்படையோடு சென்று கைப்பற்றுவதில்லை. ஜனநாயக முறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம். இது கைப்பற்றுவதல்ல. இழந்ததை மீட்டெடுப்பது. இவ்வாறு அவர் கூறினார்.