சென்னை : பெட்ரோல், டீசல் கட்டணங்கள் சென்னையில் சதம் அடித்துள்ள நிலையில், ஊபர், ஓலா வாடகை கார்களுக்கான பயணக் கட்டணங்களை ஓசைபடாமல் உயர்த்தியுள்ளன. மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை அடுத்து தற்போது சென்னையிலும் 10 முதல் 14% அளவிற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனங்களின் வாடகை கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் கிமீ ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.20 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஊபர் நிறுவனம், எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் போதுமானதாக இல்லை என வாடகை கார் ஓட்டுனர்களிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததாக கூறியுள்ளது.
இதையடுத்து வாகன கார் கட்டணத்தை 10% உயர்த்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தை பொறுத்தவரை முன்பு கிலோ மீட்டர் ஒன்றுக்கு நேரத்திற்கு ஏற்றபடி ரூ.15 முதல் ரூ.18 வரை வசூலித்துவந்தது. அது தற்போது ரூ. 17 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடகை கார்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தாலும் நிறுவனங்களின் ஆப் இணைத்தை துண்டித்துவிட்டு, ஏராளமான ஓட்டுனர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டதால் சென்னையில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிலர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக தர பயணிகளை நிர்பந்திப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.