×

அரசு வாகனத்தை சேதப்படுத்தியதாக புகார் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு  மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்ற பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்தித்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக அரசு கேமராமேன் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பெரியகருப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Minister Periyakaruppan ,ICC , Government Vehicle, Minister Periyakaruppan, Case Canceled, high court
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...