×

மணலி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மணலி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி பணிகளும் விரைவாக நடந்தன.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படியும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் கிராமம் அருகே கொசஸ்தலையாற்றின் வலது கரையில் சுமார் 1000 மீட்டர் வரை அலைக்கற்களுடன் கூடிய கரை அமைக்கும் பணி, சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலிபுதுநகர் ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் 4000 மீட்டர் வரை கரையை பலப்படுத்துதல், இடையான்சாவடி அருகே கொசஸ்தலையாற்றின் இடதுகரையில் 2000 மீட்டர் வரை கரையை மறுசீரமைக்கும் பணி ஆகியவற்றிற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் முன்னேற்பாடு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, கொசஸ்தலையாறு வடிநில பகுதியில் ரூ.3,220 கோடி மதிப்பீட்டில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மணலி மண்டலம், வார்டு 16ல் உள்ள வடிவுடையம்மன் நகர் பகுதியில் ரூ.51.88 கோடி மதிப்பீட்டில் 15.41 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடந்து வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும், 60 அடி சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ரூ.43.08 கோடி மதிப்பீட்டில் 10.45 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடந்து வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.

பின்னர், திருவொற்றியூர் மண்டலம், வார்டு 4ல் மணலி விரைவு நெடுஞ்சாலையில் ரூ.7.67 கோடி மதிப்பீட்டில், 0.81 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடந்து வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். மேலும், கடந்த வடகிழக்கு பருவ மழையின்போது கொருக்குப்பேட்டை, கண்ணன் தெரு, தீயப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் மழைநீர் தேங்கி, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வரும் மழை காலத்தில் மழைநீர் தேக்கத்தை தவிர்க்கும் பொருட்டு கண்ணன் தெரு, தீயப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 1.23 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை  மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி,  சட்டமன்ற உறுப்பினர்கள்  சுதர்சனம், கே.பி.சங்கர், எபினேசர், துரை.சந்திரசேகர், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Manali ,Tiruvottiyur ,Korukkupet , Manali, Tiruvottiyur, Korukkupettai, Rainwater Drainage, Chief Minister MK Stalin,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...