×

திருமணமான 15 நாட்களில் புதுமாப்பிள்ளை படுகொலை: திண்டுக்கல்லில் 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (26). தனியார் வங்கி ஊழியர். இவருக்கும், தென்றல் தேன்மொழி என்பவருக்கும் கடந்த 6ம் தேதி திருமணம் நடந்தது. பிரபாகரனின் நண்பர் திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டியை சேர்ந்த சூர்யா. இவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபாகரன் நண்பர்களுடன் பாலகிருஷ்ணாபுரம் அடுத்துள்ள ஏர்போர்ட் நகர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ஏர்போர்ட் நகர் பகுதிக்கு டூவீலர்களில் வந்த அடையாளம் தெரியாத மர்மக்கும்பல்  பிரபாகரனை குறி வைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக  வெட்டியது.

இதை தடுக்க முயன்ற நண்பர்கள் கார்த்திக் (27), வினோத் கண்ணன் (20) ஆகியோரையும் அக்கும்பல் வெட்டியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அக்கும்பல்  தப்பியோடி விட்டது. தாக்குதலில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த கார்த்திக், வினோத் கண்ணனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தை எஸ்பி சீனிவாசன், டிஎஸ்பி முருகன் பார்வையிட்டனர்.
இதுகுறித்து  திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, ராஜ்குமார் (19), கரண்குமார் (21), ராஜேஸ்வரன் (21), ஸ்ரீதர் (21), ரஞ்சித் (21) ஆகியோரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. புது மாப்பிள்ளை வெட்டி  கொல்லப்பட்ட சம்பவம், திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pudumappillai ,Dindigul , Pudumappillai murder within 15 days of marriage: 5 arrested in Dindigul
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...