விருதுநகர்: நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், மதக்கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் தனியார் மண்டபத்தில் டிஎன்எஸ்டிசி மற்றும் ஏஐடியுசி ஆண்டு பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இலங்கையில் விலைவாசி உயர்வை குறைக்க தவறிய ராஜபக்சே அரசை கண்டித்து 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதே போன்ற போராட்டம் இந்தியாவில் நடக்க வெகுநாட்கள் ஆகாது. அந்தளவிற்கு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து வருகிறது. 800 வகையான மருந்து, மாத்திரை விலை உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டணம் ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளனர். விலைவாசி உயர்வால் சென்ற மாதத்தை விட கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலவிட வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். விலைவாசியை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விலைவாசி உயர்வை திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி. மக்கள் இந்தியில் பேச வேண்டுமென நாட்டின் உள்துறை அமைச்சர் உத்தரவு போடுவதை ஏற்க முடியாது. உள்துறை அமைச்சக சுற்றறிக்கை முற்றிலும் இந்தியில் அனுப்புகின்றனர். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளன. வரும் ஆக. 6, 7, 8, 9 தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஆக. 9ல் ‘வெள்ளையனே வெளியேறு’ நாளில் ‘மோடி அரசே வெளியேறு’ என்கிற முழக்கத்துடன் தொண்டர்கள் அணிவகுப்பு நடைபெறும். இவ்வாறு தெரிவித்தார்.