திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (18). காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பபிஷா (18). இவர்கள் பொங்கலூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். ஒரே பள்ளி என்பதால் நண்பர்களாக பழகினர். இது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு இருவரும் பிளஸ் 2 படிப்பை முடித்தனர். பின்னர் நரேஷ்குமார் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
பபிஷா, பியூட்டி பார்லர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 8ம் தேதி பியூட்டி பார்லர் பயிற்சிக்கு சென்ற பபிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் பொங்கலூர் அருகே தேவனம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் நேற்று காலை ஆண் மற்றும் ஒரு பெண் சடலங்கள் மிதந்தன. இரு உடல்களும் ஒரே துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தது.
இதனை பார்த்தவர்கள் அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிஏபி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டது நரேஷ்குமார் மற்றும் பபிஷா என்பதும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.