×

திருமணமாகி 15 நாட்களில் புது மாப்பிள்ளை வெட்டி படுகொலை: தடுத்த நண்பருக்கும் சரமாரி வெட்டு; திண்டுக்கல்லில் பயங்கரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பிரபாகரன் (26). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி தென்றல் தேன்மொழி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 நாட்களே ஆகின்றன. திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவர் பிரபாகரனின் நண்பர். நேற்றிரவு சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் மற்றும் நண்பர்கள் கார்த்திக், குணசேகரன் ஆகியோர் சென்றுள்ளனர்.

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, ஏர்போர்ட் நகர் பகுதிக்கு டூவீலர்களில் வந்த அடையாளம் தெரியாத  மர்ம கும்பல், பிரபாகரனை குறி வைத்து, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதை தடுக்க முயன்ற  கார்த்திக்கையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அந்த கும்பல், தப்பியோடியது. படுகாயமடைந்த பிரபாகரன் மற்றும் கார்த்திக்கை மற்ற நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிரபாகரனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கார்த்திக் தீவிர சிகிச்சையில் உள்ளார். புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருமணம் முடிந்த 15 நாட்களில் புது மாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dindigul , New groom hacked to death 15 days after marriage: volley cut to detained friend; Terrible in Dindigul
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்