×

தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜ முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

சீர்காழி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீர்காழியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சி. பாஜவை சார்ந்தவர்கள் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். வன்முறையை தூண்ட திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய் உதவி செய்துள்ளது. அந்த உதவிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழக அரசு உதவிகள் செய்ய தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த அதிதீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு பாஜ அரசு முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் எச்.ராஜா விவகாரத்தையும் பார்க்கிறேன். கேரளாவில் அவரது ஜம்பம் பலிக்காது. மதவாத அரசியல் அங்கு எடுபடாது’ என்று திருமாவளவன் கூறினார்.

Tags : BJP ,Tamil Nadu ,Thirumavalavan , In Tamil Nadu, tension, Baja, Thirumavalavan
× RELATED வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின்...