சின்னமனூர் : சின்னமனூர் 25வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சின்னமனூர் நகராட்சியில் உள்ள 25வது வார்டில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், பள்ளிவாசல், கோயில்கள், கிராம நிர்வாக அலுவலகம், வங்கிகள், ஏ.டி.எம் மையம் ஆகியவை உள்ளன.
இப்பகுதியில் உள்ள தெற்கு முஸ்லீம் தெருவில், நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகத்திற்கு தரையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பாதாளச் சாக்கடையும், கழிவுநீர் வாறுகாலும் செல்கின்றன. குடிநீர் குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது. இதில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால், கேன் தண்ணீரை வாங்கி குடிக்கின்றனர்.இது குறித்து நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.