சென்னை: முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேற்பார்வை குழுவில் ஏற்கெனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் விரைவில் முழுமையாக செயல்படும் என சுப்ரிம் கோர்ட் கூறியிருந்தது . இதனால் ஓராண்டு வரை ஏற்கனவே உள்ள ஆணையின்படி முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது. அது எடுக்கும் முடிவுக்கு தமிழக, கேரள அரசுகள் கட்டுப்பட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தலா ஒரு வல்லுனரும், ஒன்றிய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஒரு வல்லுனரும் இக்குழுவில் இடம் பெறுவார்கள். தற்போதைய நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தை விவகாரத்தையும் கவனிக்கும். அணையின் பராமரிப்பு, வலுப்படுத்தும் பணி உள்ளிட்டவை தொடர்பாக இந்த குழு பிறப்பிக்கும் உத்தரவை கடைபிடிக்காவிட்டால், சம்மந்தப்பட்ட மாநில தலைமை செயலாளரே அதற்கு பொறுப்பாவார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.