நாகை: நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் உளுந்து, எள் பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு இதுகுறித்து பரிந்துரை செய்தது. பயிர்கள் இழப்பீடுக்கு, நிவாரணம் வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. நீண்ட நாட்கள் ஆகியும் இதுநாள் வரை நிவாரணம் வழங்கவில்லை. இதனை கண்டித்து நாகை பாலையூரில் விவசாயிகள் இன்று வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
உடனடியாக உரிய நிவாரணம் வழங்க கோரி நெற்றியில் சந்தனம் வைத்து, அதில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து கோஷம் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கடைடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.