ஊட்டி: மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டி எச்பிஎப் பகுதியில் ரூ.461 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நடப்பு ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கும் வகையில் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட லேப்டாப் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒருவாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது’’ என்றார்.