புதுடெல்லி: ‘அம்பேத்கருடன் பிரதமரை ஒப்பிட்டு பேசியதற்காக இளையராஜாவை அவமதிப்பதா?’ என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி உள்ளார். அதில், ‘மோடி ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்’ என்று கூறியிருந்தார். இளையராஜாவின் கருத்து குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் இளையராஜாவின் கருத்து பிடிக்காது. இதனால், இந்தியாவின் மிக உயரிய இசையமைப்பாளரை விட்டுவிடவில்லை. இது ஜனநாயகமா? ஒருவர் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சியாக இணைந்து வாழலாம், ஆனால் ஏன் அவமானங்களை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.