சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் (திமுக) பேசுகையில், ‘‘எழும்பூர் தொகுதி மோதிலால் தெரு பகுதியில் நூலகம் அமைக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ‘‘ எழும்பூர் மோதிலால் தெருவில் பகுதி நேர நூலகம் அமைப்பதற்கு தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அப்பகுதியில் தற்போது நூலகம் அமைக்க இயலாது” என்றார்.
இ.பரந்தாமன்: அதே எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 77வது வார்டில் டிமலஸ் சாலையில் உள்ள பகுதிநேர நூலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முழுநேர நூலகமாக அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: ஏற்கனவே, எழும்பூர் தொகுதியில் 6 கிளை நூலகங்கள் இருக்கின்றன. அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருக்குமானால் நூலகத்திற்கான அனுமதி கண்டிப்பாக வழங்கப்படும்.
இ.பரந்தாமன்: வரும் காலத்தில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.