தருமபுரி: தருமபுரி வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வரட்டாறு நீர்த் தேக்கத்தில் இருந்து இன்று முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 18.04.2022 முதல் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு 30 கன அடி வீதம் 51.840மி.க.அடி தண்ணீர் விட்டும், புதிய ஆயக்கட்டுப் பகுதியில் உள்ள நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு 30 கன அடி வீதம் 51.840 மிக.அடி தண்ணீர் விட்டும்,
ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 103.68 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தருமபுரி மாவட்டத்திலுள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2255 ஏக்கர் நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 2853 ஏக்கர் நிலங்கள், ஆக மொத்தம் 5108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.