வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெய்த கனமழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, சோலைத்தேவன்பட்டி, தங்கம்மாள்புரம், வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையால், இந்த ஒன்றியத்தில் தக்காளி விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டங்களில் தண்ணீர் தேங்கி தக்காளிச் செடிகள் அழுகுகின்றன. பழுத்த தக்காளி பழங்களை பறிக்க முடியாமல், தோட்டங்களில் அப்படியே விட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மழையால் பலமுறை தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.