×

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: அனைத்து அணைகளும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் அடங்குகிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை 4  நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. கேரள அரசின் நட்பை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். கேரள அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடுவதில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கருத்து தெரிவித்த பின்னர், பேசிய நீல்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணை பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கும் அனைத்து அணைகளும் அந்த சட்டத்திற்குள் அடங்கவுள்ளன. பெரிய அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இயக்கம், கண்காணிப்பு மற்றும் அனைத்து பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள தனி அமைப்பு ஏற்படுத்தப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிற்கு தான் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் போன்ற அனைத்து அதிகாரமும் வரவுள்ளன. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வர இன்னும் ஒரு ஆண்டு ஆகும். அணை பாதுகாப்பு சட்டத்தை ஏற்க போகிறோமா? மேற்பார்வை குழுவுக்கு அதிகாரம் இருப்பதை ஏற்க போகிறோமா? அல்லது முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க போகிறோமா? என்பதே தற்போதைய கேள்வி. முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.


Tags : AIADMK ,Mulla Periyaru Dam ,Minister ,Duraimurugan , Mullaperiyaru Dam, Assembly, Resolution, Minister Duraimurugan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...