×

சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? சட்ட மீறலை கைவிடுக : ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி சு வெங்கடேசன் கடிதம்!!

சென்னை : சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையத்திற்கான தேர்வு அறிவிப்பில் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு வேண்டுமென ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளதற்கு மதுரை எம்.பி. சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.

ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் விரேந்திர குமார் அவர்களுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளேன். மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம், முட்டுக் காடு, சென்னை 13.04. 2022 அன்று பணி நியமன அறிவிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஒரே ஒரு உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கான வாக் இன் நேர்காணல்/ தேர்வுக்கான அறிவிப்பு அது. எதிர் வரும் 22.04.2022 அன்று தேர்வு நடைபெறவுள்ளது.

அந்த அறிவிக்கையில் தேர்வுக்கான தகுதிகளில் ஒன்றாக புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது அலுவல் மொழிச் சட்ட விதிகள் 1976 ஐ மீறுவது ஆகும். மண்டலம் 3 இல் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் அலுவல் தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று அவ்விதிகள் தெளிவாக கூறுகிறது. ஒன்றிய அரசிடமிருந்து வரும் தகவல்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமென்றும், மண்டலம் 3 இல் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்து செல்லும் கடிதங்களும் ஆங்கிலம் அல்லது இந்தியில் (இந்தி மட்டுமல்ல) இருக்கலாமென்றும் தெளிவாக உள்ளது.

எனவே இந்தி மொழி அறிவை தேர்வுக்கான தகுதியாக இந்தியா முழுவதும் எந்திரகதியாக விரிவுபடுத்த, வலியுறுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இரண்டாவதாக, இந்த நிபந்தனை தமிழ்நாட்டில் இருந்து வரும் தேர்வர்களுக்கு பாதிப்பை உருவாக்குவது ஆகும். இது அப்பட்டமான இந்தி திணிப்பே ஆகும். எனவே தாங்கள் மாற்றுத் திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம், முட்டுக் காடு, சென்னைக்கு இந்தி மொழி அறிவை மேற்கண்ட தேர்வுக்கான தகுதியாக வலியுறுத்த கூடாது என்றும், இந்த நிபந்தனையை அகற்றி புதிய அறிவிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்துமாறு அமைச்சரை வலியுறுத்தி உள்ளேன்.

சற்று கண்ணயர்ந்தாலும் இடுக்குகள் வழியாக இந்தியை நுழைத்து விடுவார்கள். ஒரு காலியிடம், அதுவும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான பணி... இருந்தாலும் இந்தியைத் திணிக்கிறார்கள் எனில் அலுவல் அல்ல,  அவர்களின் மொழி அரசியலே காரணம்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,Madurai ,Su Venkatesh ,Union Government , Union Government, Madurai, MP Su Venkatesh, Letter
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...