×

டெல்லி, கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திரா, உத்தரகாண்டிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: 5 பேர் படுகாயம்; 20 பேர் கைது

திருமலை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மத ஊர்வலங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களின் மீது குறிப்பிட்ட ஒரு பிரிவினர் கல்வீசி தாக்கியதால், கலவரம் வெடித்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் மதக்கலவரமாக வெடிப்பதை  தடுக்க, நாடு முழுவதும் போலீசார் முழு உஷார்நிலையில் உள்ளனர். இந்நிலையில், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திலும் கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆலூர் ஹொளகுண்டா, இரலகட்டா ஆகிய இடங்களில் ஊர்வலம் நடந்தது.

அப்போது திடீரென சிலர் ஊர்வலத்தின் மீது கற்களை வீசி தாக்கினர். பதிலுக்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்களும் கற்களை வீசி தாக்கினர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 15க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுதொடப்ரான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவின் அடிப்படையில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கர்னூல் எஸ்பி தெரிவித்தார். டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலத்தில் கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி 14 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல் கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் நேற்று முன்தினம் இரவு நடந்த அனுமன் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது.

உத்தரகாண்டிலும் தாக்குதல்: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பகவான்பூர் கிராமத்திலும் நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது, ஊர்வலத்தின் மீது மற்றொரு பிரிவை சேர்ந்த கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதை கேள்விப்பட்டதும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் ஆவேசத்துடன் அங்கு குவிந்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், மிகப்பெரிய கலவரம் தடுக்கப்பட்டது.

* ஹூப்பள்ளியில் 144 தடை உத்தரவு
கர்நாடகா மாநிலம், பழைய ஹூப்பள்ளி நகரில் நேற்று முன்தினம் இரவு ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அது பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பரவியது. இது காட்டுத்தீயாக பரவியதால், ஒரு கும்பல் கோயில்கள் மீது கல்வீசி தாக்கியது. பொதுமக்களின் வாகனங்கள், கடைகளும் நொறுக்கப்பட்டன. இதை தடுக்க முயன்ற போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட காயமடைந்தனர். மேலும், நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்ட ஒரு கும்பல், போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கியது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 46 பேர், சிசிடிசி கேமரா உதவியால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹூப்பள்ளி -தார்வார் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* முக்கிய குற்றவாளி சிக்கினான்
டெல்லி ஜஹாங்கிப்புரி வன்முறை சதிக்கு திட்டமிட்ட முக்கிய குற்றவாளியான அன்சார் தலைமறைவாக இருந்தார். அவரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். வன்முறை நடந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* துப்பாக்கியால் சுட்டு தாக்குதல்
ஜஹாங்கிபுரி கலவரத்தில் ஈடுபட்ட கும்பல், ஊர்வலத்தினர் மீது நாட்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதில்,  சப்-இன்ஸ்பெக்டர் மெதலால் மீனாவின் கையில் குண்டு பாய்ந்தது. இது தொடர்பாக அஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், வன்முறையில் ஈடுபட்ட மற்றொரு நபர் 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Hanuman Jayanti ,Delhi, Karnataka ,Andhra Pradesh ,Uttarakhand , Hanuman Jayanti procession in Delhi, Karnataka followed by Andhra Pradesh and Uttarakhand: 5 injured; 20 people arrested
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி