×

இந்தியாவுக்கு தக்காளி பாகிஸ்தானுக்கு ரத்தம்

காபூல்: பாகிஸ்தானை புகலிடமாக கொண்டு, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தெக்ரி-இ-தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் முக்கியமானவை. இந்த அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றன. சில தினங்களுக்கு முன், ஆப்கான் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக,  ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் விமானப்படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, தனது நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரை நேற்று நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. மேலும். ‘ஆப்கானிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தியது கடுமையான குற்றம். இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், யாருக்கும் சாதகமாக இருக்காது,’ என்றும் எச்சரித்துள்ளது. புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இருநாட்டு உறவும் துண்டிக்கப்பட்டது. தற்போது, தனது நாட்டு வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதற்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தி இருப்பது, ‘இந்தியாவுக்கு என்றால் தக்காளி; பாகிஸ்தானுக்கு என்றால் ரத்தமா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

* ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் 2,700 கிமீ நீளத்துக்கு எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.


Tags : India ,Pakistan , Tomatoes for India Blood for Pakistan
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!