×

வேலூரில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 பூப்பல்லக்குகள் விடிய, விடிய பவனி: பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்

வேலூர்: சித்ரா பவுர்ணமியையொட்டி வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட 8 பூப்பல்லக்குள் விடிய, விடிய பவனி வந்தது. இதில் திரளான பக்தர்க்ள கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று பிரமாண்ட பூப்பல்லக்கு திருவிழா களைக்கட்டும். அன்றைய தினம் இரவு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் திரளான மக்கள் இவ்விழாவை காண வேலூரில் கூடுவார்கள். இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பூப்பல்லக்கு விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சித்ரா பவுர்ணமியையொட்டி பூப்பல்லக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கு, வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் இருந்து செல்வ விநாயகர் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயிலில் இருந்து அபயாம்பிகை சமேத தாரகேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி ரோடு விஷ்ணு துர்க்கை மற்றும் வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து விஷ்ணு துர்க்கை, வெங்கடேச பெருமாள் உற்சவமூர்த்திகள் புஷ்ப பல்லக்கு, வாணியர் வீதி கனக துர்க்கையம்மன் கோயிலில் இருந்து கனகதுர்க்கையம்மன், விநாயகர் உற்சவ மூர்த்திகள் புஷ்ப பல்லக்கு, சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோயில் புஷ்பபல்லக்கு, லாங்கு பஜார் புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலியம்மன் கோயிலில் இருந்து வேம்புலியம்மன் பூப்பல்லக்கு, புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயணசாமி கோயிலில் இருந்து பூப்பல்லக்கு ஆகிய 8 பிரமாண்ட பல்லக்குகள் வண்ண மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி வேலூர் மண்டித்தெருவில் 3 இடங்களிலும், நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே என மொத்தம் 4 இடங்களில் இன்னிசை கச்சேரிகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இன்னிசை கச்சேரியை ரசித்தபடி பூப்பல்லக்குகளையும் பார்த்து ரசித்தனர். நள்ளிரவு 8 பூப்பல்லக்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து மண்டி வீதிக்கு வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கு பூப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க 8 பூப்பல்லக்குகளும் புறப்பட்டன. பின்னர் லாங்கு பஜார், கமிஷரி பஜார், பில்டர்பெட்ரோடு, திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், அண்ணா சாலை வழியாக கோட்டை வெளியை அடைந்தன.

விடிய, விடிய நடந்த இந்த பூப்பல்லக்குகள் பவனியின்போது வழிநெடுக பக்தர்கள் கண்விழித்து காத்திருந்து ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 8 பல்லக்குகளும் கோட்டையை அடைந்ததும் அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்த திருவிழாவையொட்டி ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டிஎஸ்பி, 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Vidya ,Vidya Bhavani ,Aarti , Vellore, Chitra Pavurnami Festival, Lighting, Devotees Aarti
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்