புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு கவர்னர் தமிழிசையை திரும்ப பெற வேண்டும், நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருக்கிறார். தற்போது கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் உள்ளனர். தேர்தல் சமயத்தில் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். புதுவையை பெஸ்ட் மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் சொன்னார். நிதியை வாரி வழங்குவோம், கடனை தள்ளுபடி செய்வோம், மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று அமித்ஷா சொன்னார். புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
கர்நாடகாவில் உள்ள பாஜக அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள். இங்கு அமைச்சர்கள் 30 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள். அவர்களுக்குள் 10 சதவீதம் தான் வித்தியாசம். இப்படிப்பட்ட ஒரு ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. எதற்காக நாங்கள் கிரண்பேடியை எதிர்த்து போராடினோமோ, அதை முழுமையாக தமிழிசையிடம் ரங்கசாமி விட்டுவிட்டு சரணாகதி அடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், தமிழிசையை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசை நடத்துவது ஜனநாயக விரோத செயலாகும். அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நிரந்தரமாக துணைநிலை ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றார்.