சென்னை: அமமுக சார்பில் அமைக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் கடந்த மாதம் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்ட பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆலோசனைக்கு பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆளுநர் பதவி, ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என அண்ணா கூறினார். அவர் வழிவந்தவர்கள் நாங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் பிரச்னையான மேகதாது, காவிரி பிரச்னை, நீட் பிரச்னை எது இருந்தாலும் அதுகுறித்த தீர்மானங்கள் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை.
மாநிலத்திற்கு தேவையானவற்றை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று தருவதற்கான செயலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை என்றே நினைக்கிறேன். அதிமுக ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே செயல்படுகின்றனர். அண்ணாமலை கருத்திற்கெல்லாம் நான் பதில்சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.