குன்னூர் : குன்னூர் காட்டேரி பூங்கா அருகே ரன்னிமேடு ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலையடிவாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குட்டியுடன் 9 காட்டுயானைகள் கடந்த 23 நாட்களாக தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதி மற்றும் கிளண்டேல், காட்டேரி பகுதி அருகே முகாமிட்டிருந்தன.
பின்னர், சுற்று வட்டார பகுதிகளில் உலா வந்து அங்கிருந்த வாழை மரங்களை தின்றும் சேதப்படுத்தியும் சென்றன. 9 யானைகள் அவ்வப்போது குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையின் அருகே வந்து செல்கின்றன. அப்போது சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி யானைகளை புகைப்படங்கள் எடுத்து தொந்தரவு செய்கின்றனர்.
யானைகளுடன் குட்டிகள் இருப்பதால் அவற்றை பாதுகாக்க சுற்றுலா பயணிகளை தாக்கும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், காட்டேரி பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் ரன்னிமேடு ரயில்நிலைய பகுதிக்கு நேற்று விரட்டினர்.
அப்போது, சுற்றுலா பயணிகள் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டுயானைகளை கண்டு படம் பிடித்து கூச்சலிட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு யானை கோபமடைந்து சுற்றுலா பயணிகளை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வனத்துறையினர் போராடி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் தண்டவாளத்தினை கடந்து அடர்ந்த வனப்பகுதியில் சென்றன.