×

பாஜ ஆளும் உ.பி.,யில் இந்தி, ஆங்கிலத்தை தவிர 3வது மொழியாக தமிழ் வருமா?..அன்புமணி கேள்வி

சென்னை:  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:
பாமகவில், பாமக 2.0 என புதிய யுகம் கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்புகள் மாற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் அங்குள்ள அண்ணா அரங்கில் நடந்தது. இதில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பாமக பொறுப்பாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருப்பவர்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். யார் மீதாவது புகார் வந்தால், அவர்கள் கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.10.5 சதவீத இடஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நிறைவேற்றுவார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது நமது நோக்கம். அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றம் மூலம் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித  இடஒதுக்கீடு தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழக அரசு, பாமகவுக்கு சாதகமான முடிவை எடுக்கும். தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு கண்டனத்துக்குரியது. பாஜ ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர 3வது மொழியாக தமிழை கொண்டு வர முடியுமா? நாட்டில் இரு மொழி கொள்கை மட்டுமே சாத்தியமாகும். 3வது மொழி சாத்தியமில்லை’’ என்றார்.

நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்பாள், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், மாவட்ட தலைவர் உமாபதி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காற்றாலைக்கு தனி அமைச்சகம்: இதற்கிடையில் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ‘‘புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த  பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக்  கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Paja ,Buschman , BJP, Hindi, English, Tamil, Anbumani question
× RELATED மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக...