×

மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் முதல்வர் காணொலியில் பேச்சு: அத்தியாவசிய தேவை மற்றும் நலன் குறித்து விசாரித்தார்

சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்து மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்து விசாரித்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைத் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.குறிப்பாக கடந்த மாதம் 22ம் தேதி கைக்குழந்தை உட்பட 16 பேர் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.  இந்தநிலையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கையில் இருந்து வரும் இலங்கை தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 13 குடும்பங்களைச் சார்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழ்நாடு வந்துள்ளனர்.

இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 17 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு  அரசு சார்பில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, 19,223 இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த 58,547 நபர்கள் ராமநாதபுரம் மற்றும் திருச்சி உட்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   தமிழக அரசு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தங்குமிடம், குடிநீர் வசதி, மின்சார வசதி, ஒவ்வொரு மாதமும் கருணைத் தொகை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை, அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குதல், மானிய விலையில் ஓராண்டுக்கு ஐந்து எரிவாயு உருளைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக அவர்களுடன் கலந்துரையாடினார்.  அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார். இந்நிகழ்வில். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி.ஐகநாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Tamils ,Mandapam , Hall Camp, Sri Lankan Tamil, Chief Minister,
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்