சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஒட்டியுள்ள ஆத்தங்குடி, கோனாப்பட்டு, கண்டனூர், கானாடுகாத்தான் உள்ளிட்ட 15 ஊர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் ஆத்தங்குடி தரை கற்களின் வேலைப்பாடு பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும். இந்த தரைக்கற்கள் தயாரிப்பு 500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தரை கற்களின் வேலைப்பாடுகளை பார்ப்பதற்காகவே செட்டிநாடு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள்.
இந்த பாரம்பரியமிக்க தரை கற்களுக்கு அங்கீகாரம் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஆத்தங்குடி தரை கற்களுக்கு புவிசார் குறியீடு கோரி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான தொழில் நுட்ப மேம்பாடு மையம், செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையம், செட்டிநாடு ஆத்தாங்குடி ஹெரிடேஜ் தரை கற்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஒன்றிய அரசுக்கு விண்ணப்பம் செய்துள்ளன.
இது குறித்து அரசு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறும்போது, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க ஆத்தங்குடி தரை கற்களின் உரிமை வேறு எந்த மாநிலத்திற்கோ சென்றுவிடக்கூடாது. ஏற்கனவே, பல பொருட்களை இந்த வகையில் இழந்திருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் திண்டுக்கல் பூட்டு, பவானி சமுக்காளம், காஞ்சிபுரம் பட்டு போன்ற 30 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கியுள்ளோம். அதன் அடிப்படையில்தான் தற்போது ஆத்தங்குடி தரை கற்களுக்கும் புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளோம் என்றார்.