மதுரை: சித்திரை திருவிழாவை ஒட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் உற்சவம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் பக்தர்கள் கரையோரங்களில் நின்று தரிசனம் செய்ய ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். நாளை காலை 5.30 மணி முதல் 6.20 மணிக்குள் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருள உள்ளார்.
சித்ராபவுர்ணமியை ஒட்டி மதுரையில் 12 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி, உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வேகு விமர்சியாக நாளை நடைபெற உள்ளது. இதற்காக மதுரை ஆழ்வார்புரம் ஆற்றுப் பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதித்து திருவிழா நடத்துவதால் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு வழக்கத்தை விடவும் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.