திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிரசித்தி பெற்ற விஷு கனி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். வழக்கமாக ஏப்ரல் 14ம் தேதி தான் விஷு கொண்டாடப்படும். ஆனால், இந்த வருட சித்திரை விஷு பண்டிகை இன்று (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 10ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தரிசனம் நடத்தும் பக்தர்கள் அனைவருக்கும் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். இன்று விஷுக்கனி தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்றே சபரிமலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர். இன்று தரிசனம் செய்வதற்கு இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 18ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.