சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீயோக லட்சுமிநரசிம்மர் சுவாமி கோயில், செங்குத்தான 750 அடி உயர மலையில் 1305 படிகளுடன் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணி 12 ஆண்டுகளாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து ரோப்கார் சோதனை ஓட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து ரோப் கார் சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்பி.ஜெத்ரட்சகன், கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உள்ளிட்டோர் ரோப்காரில் மலைக்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தனர்.