×

ஈரோடு காவல்நிலையத்தில் தஞ்சம் காதல் திருணம் செய்தவரை தாக்கி புதுப்பெண் கடத்தல்: போலீசார் மீட்டனர்; பெற்றோர் உட்பட 30 பேர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு  சின்னியம்பாளையம் காந்தி நகரை சோந்த குப்புசாமி மகன் விக்ரம் (24). இவரும் அதேபகுதியில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த உஷா நந்தினியும் காதலித்து வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே காதல்ஜோடி நேற்று முன்தினம் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் நீலாவதி இருவரது பெற்றோரையும் அழைத்து பேசியதில் உஷா நந்தினி கணவருடன் செல்வதாக கூறினார். அதன்படி அங்கிருந்து கிளம்பிய புதுமண தம்பதி ஒரு கடையில் டீ குடித்தனர். அப்போது உஷா நந்தினியின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் என 30க்கும் மேற்பட்டோர் 3 கார்களில் அங்கு வந்தனர். ஆவேசமாக இறங்கிய அவர்கள் விக்ரமை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

ஒரு கட்டத்தில் விக்ரமை கை மற்றும் கல்லால் தாக்கினர். உஷா நந்தினியை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர். இது குறித்து விக்ரம் ஈரோடு தெற்கு போலீஸ்  ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, உஷா  நந்தினியின் பெற்றோர், சகோதரர் உட்பட 30 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் ஈரோடு தெற்கு போலீசார் உஷா நந்தினியை நேற்று மதியம் மீட்டு போலீஸ் நிலையம்  அழைத்து வந்தனர். அப்போது, அவர் பெற்றோருடன் செல்வதாக கூறியதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.  

* பெண் இன்ஸ்பெக்டர் திடீர் மயக்கம்
ஈரோடு எஸ்பி சசி மோகன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நீலாவதியை நேற்று காலை செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாக  எச்சரித்துள்ளார். தஞ்சம் அடைந்த புதுமண தம்பதியை போதிய பாதுகாப்பின்றியும், பெண் வீட்டாரின் மனநிலையை  புரிந்து கொள்ளாமல் எவ்வித முன்னேற்பாடுமின்றி அனுப்பியதால்தான் கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக எஸ்பி எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட  நீலாதேவி, சோலார் நகராட்சி நகரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags : Erode police , Erode police abducts newlyweds Case against 30 people, including parents
× RELATED கோடை விடுமுறையில் குவியும் சுற்றுலா...