திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் கனமழை தொடர்கிறது. இன்று திருவனந்தபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டின் கடல் பகுதியின் மேல் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக கேரளாவிலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம் உள்பட மாவட்டங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை வரும் 17ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஒரு சில இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று பகல் முழுவதும் இடைவிடாது மழை பெய்தது. கடந்த 2 நாட்களில் கொச்சியில் தான் மிக அதிகமாக 7.3 செமீ மழை பெய்தது. மார்ச் 1 முதல் 13 வரை கேரளாவில் 16.48 செமீ மழை பெய்து உள்ளது. இந்த நாட்களில் வழக்கமாக பெய்யும் கோடை மழையை விட 121 சதவீதம் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.